பேட்டி 4
பிரம்மாண்டமான ‘சிந்தாமணி’
ஓட்டலில் லீனா நுழைய, வரவேற்பு பெண்ணிடம் பரபரப்பு
தொற்றிக் கொண்டது. லீனாவை விட அதிக உதட்டுச்சாயம் பூசி
‘வாய்- மையே வெல்லும்’ என
உணர்த்தினாள்.
“யெஸ்……என்ன உதவி வேணும்” – கொஞ்சலாய் கேட்டாள் வரவேற்பு பெண்.
“மிஸ்டர்
சுமந்த் சாட்டே…… ‘கஹானி’ பத்திரிக்கை நிருபரை
மீட் பண்ணனும்”
“ரூம் நம்பர் 303”
“தாங்க்ஸ்”
– என்றபடி லீனா ஒயிலாய் சுழன்று, அன்ன நடை போட்டு
நடப்பதை லாபியில் இருந்த 48 கண்களில், 46 கண்கள் ரசித்தன. பொறாமையுடன் பார்த்தன வரவேற்பு பெண்ணின்
2 கண்கள்.
303-ஐ நெருங்கி லீனா பஸ்ஸரை அழுத்தினாள்……வழுக்கை
தலையும், அரைக்கை பனியனுமாக சுமந்த் சாட்டே வெளிப்பட்டான்; லீனாவைப்
பார்த்து பற்களை வெளிப்படுத்தினான் “யெஸ் பேபி” என வழிந்தான்.
“சார்….ஐ ஆம் டமில் ஆக்ட்ரெஸ் லீனா. உங்க பத்திரிக்கையில் என்
பேட்டி வந்தால் பாலிவுட்ல
ஒரு சான்ஸ் அடிக்குமே” என படபடத்தாள்.
“ஓ….யெஸ்…..ஷ்யூர்” சுமந்த் தடுமாறினான்.
உரிமையாக உள்ளே வந்தாள் லீனா. சோபாவில் சாய்ந்து அமர்ந்ததே ஒரு புதுப்பட போஸ் போல் இருந்தது ”வாவ்…ரூம் ரொம்ப அற்புதமா இருக்கு”
”நீங்க
வந்ததும் இன்னும் அழகு கூடிடுச்சு”
”அய்யோடா …. ரொம்ப புகழறீங்க” லீனா குலுங்கிச் சிரித்து களேபரம் செய்தாள்.
”இதுல என்ன தவறு? நீங்க உண்மையில் அழகுதான். இந்தி நடிகைகள் எல்லாம் வெறும் மேக்கப் அழகிகள்” என்ற அவன் “மிஸ் நம்ம பேட்டிக்கு வசதியா சில ஸ்டில்ஸ் எடுக்கணும்” என அடி போட்டான்.
” ஓ………தாராளமாக” லீனா ‘தாராளமாக’
என அழுத்திச் சொன்னாள். “வந்த விருந்தினருக்கு
சாப்பிட ஏதும் இல்லையா” அவளது பெரிய விழிகள் மேலும் விரிந்தன.
“இதோ… டீ & பிஸ்கட்ஸ். தனி ஒரு நடிகைக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” அவன் பரபரத்தான்.
டீக்கோப்பை, பிஸ்க்கட் தட்டுடன் அவன் லீனாவின் அருகில் வர, தட்டை வாங்க முயன்ற லீனாவின் பட்டுக் கைபட்டு, தட்டு தட்டுத்தடுமாறி தரையில் கவிழ்ந்தது.
“ஓ…சாரி…” என சாரி சரிய லீனா எழுந்தாள். சுமந்த் தடுமாறி “ரூ….ம் பா…யை கூ…ப்…பி..ட..வா?” என குழறினான்.
லீனா தலை குனிந்தபடி நின்றாள். ”ப்ளீஸ்….. ரூம் பாய் வேணாம். ஒரு வாளி தண்ணீர் கொடுங்க. நானே க்ளீன் பண்றேன்”
லீனாவிடமிருந்து பார்வை விலக்காமல் அவன் பாத்ரூம் உள்ளே சென்றான். உள்ளே பக்கெட்டில் தண்ணீர் நிரப்பும் சத்தம்.
லீனா அவனை தொடர்ந்து சென்று பாத்ரூம் கதவருகே கை வைத்து ஒய்யாரமாய் நின்றாள். “சூப்பர் போஸ்” சுமந்த் தண்ணீர் பிடித்தபடி தன்னிலை மறந்தான்.
லீனா சட்டென பாத்ரூம் கதவை இழுத்து
மூடினாள். பிறகு தன் இடுப்பு சேலையை இழுத்து
மூடினாள். பாத்ரூம் வெளித் தாழ்ப்பாள் போட்டு நின்றாள்.
“லீனா… ஏன் கதவை பூட்டுரே” உள்ளே அவன் அலற-
”வெளிக் கீ இருந்தா தப்பிச்சுக்கோடா பயலே” – என்றாள்.
இடையில், இடைவெளியில் லீனாவின் இடையில் மயங்கிய மடையன் கடைசியாய்த் தெளிந்தான்.
“உனக்கு என்ன வேணும்” என்றான்.
“அப்படி வா வழிக்கு, காலையில் அமைச்சர் வேலவனை பேட்டி கண்ட பேடி, எங்கேடா அந்த சி.டி?” லீனா குரலில் கடுமை.
“டீப்பாய் மேலேதான் இருக்கு. என்னை திறந்து விடு” என ‘என்னை மறந்து விடு’ சொல்லும் ஏழை ஹீரோவைப் போல சுமந்த் புலம்பினான்.
விருட்டென டீப்பாய் மேல் இருந்த சி.டியை கைக்குள் எடுத்து ரவிக்கைக்குள்
வைத்தாள். நக்கலாய் பாட்டுப் படித்தாள் --
“நான் ஒரு சிந்து…………..கக்கூசுல பூந்து, குழாயத் தொறந்து வுட்டேன்.
வாளி இருந்தும், சொம்பு இருந்தும், தண்ணி எதுவுமில்ல…. அடக் கழுவ முடியவில்ல”
என ‘சிந்து பைரவி’ ராகத்தில் லீனா பாடி, சில விருது பெற்ற கலைஞர்களின் கண்ணீர் சிந்துவதற்கு காரணமானாள்.
“ஹே……ஹே…..” என சுமந்த் கதவை தட்டிக் கொண்டிருக்க “ராம்…..ராம்” என லீனா பழிப்புக் காட்டிவிட்டு, ரூமை விட்டு வெளியேறி, ஹோட்டலின் பின்பக்க வழியாக நடக்க தொடங்கினாள்..
மின்னல் போல, ஜெனரேட்டர் ரூம் நுழைந்த லீனாவின் உடல் மீது– ஜெனரேட்டரின் காற்று மோத லீனாவின் உடை அவள் உடலுடன் ஒட்டி ரூமின் வெப்பம் கூடியது. காவலாள் வைத்த சல்யூட்டை சட்டை செய்யாமல் வெளியேறினாள்.
தடதடவென பின் வாசல் வந்த லீனா, தயாராக நின்ற ‘மருதம்’ காருக்குள் தன்னைச் சொருக – கார் காரிகையோடு பறந்தது.
கூகுள் போட்டு தேடினாலும் கிடைக்காதபடி பதுக்கியிருந்த சிடி-யை பதுமை பதூசாய் எடுத்தாள்.
லேப்-டாப்பை
எடுத்து சிடி-யை சொருகி ‘லப்-டப்’போடு திரையை நோக்கினாள் லீனா. கன்னிப்பொறிக்கு கணிப்பொறி கட்டுப்பட்டு திரை திறந்தது. அமைச்சர்
வேலவன் திரையில் தோன்றினார்
************************
************************